Skip to main content

ஐந்து நாள் அனுபவங்கள்.

க்டோபர் 7, 2K8-ல் எழுதியது.

***

*புதன் கிழமை ஈரோடு ப.செ.பார்க்கின் பின்புறம் முதல் வலது திருப்பத்தில் இருக்கும் எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகத்தின் எதிர்ப்புறம் கொஞ்சம் தள்ளி அமைந்துள்ள பாரதி பதிப்பக நூல் நிலையத்தில் இருந்து மூன்று புத்தகங்கள் வாங்கினேன்.

* லக்ஷ்மி நகர் வழியாக சித்தோடு சென்று இடது கட் அடித்து, ஈரோடு சென்று, திரும்பும் போது அக்ரகாரம் வழியாக மீண்டும் லக்ஷ்மி நகர் வந்து குமாரபாளையம் சென்று மீண்டும் ஊர் வந்து.. ஒரு மாதிரி 'g'வடிவில் பயணம் செய்தேன்.

ஜீவா டிப்போவில் இருந்து சேலம் செல்லும் புதுப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருவதால், கோவை - சேலம் நெடுஞ்சாலை சில இடங்களில் 'Take Diversion' போர்டுகளோடும், Reflection Sticker அம்புகளோடும், தெறித்த ஜல்லிகளோடும் இருந்தது.

ஈரோடு பேருந்து நிலையத்தில் நடந்து கொண்டிருந்த காரை போடும் பணிகள் முடிந்து, இன்னும் கலக்கலாகக் காட்சி அளிக்கிறது. மாநகராட்சி ஆகி விட்டதன் அடையாளங்கள் தெரிகின்றன. ட்ராஃபிக் அதிகம் ஆகி இருக்கின்றது. கமிஷனர், மாநகர மேயர் என போஸ்டர்கள் ஆங்காங்கே! எல்லைகளில் ஸ்பீட் ப்ரேக்கர்கள், சினிமா போஸ்டர்கள், மஞ்சள் தூள் வாசனை, வீரப்பன் சத்திரம் பாரதி தியேட்டர், பார்க்கின் நடுவில் தேர் வடிவ ட்ராஃபிக் காவலரின் கையசைத்தல்களில் நகரும் நகரின் இயக்கம், கூட்டம் அப்பும் ஷாப்பிங் சந்துகள், கட்டில் கடை ஷர்ட்கள், கவிழ்த்த குடையில் பனியன், ஜட்டிகள், செயற்கை மலையில் கீழிருந்து மேலேறும் ரொட்டேஷனல் அருவிகள், பெரிய மாரியம்மன், கஸ்தூரிநாதர் கோயில்கள், எதிரெதிர் முகம் காட்டும் செங்குந்தர், கலைமகள் பள்ளிகள், கோவை ரூட்டை ஒற்றை விரலில் காட்டும் தங்க முலாம் எம்.ஜி.ஆர்.... பெரியாரின் ஊர் வளர்ந்து கொண்டிருக்கிறது,வேகமாக!

* ஃபேக்டரிகள் இருப்பதால் காற்றில் கெமிக்கல் நாற்றம் விளாசும் பி.பி.அக்ரஹாரம் ரம்ஜான் கொண்டாட்டங்களில் இருந்தது. பி.பி. என்றால் பிராமண பெரிய என்ற விளக்கம். அக்ரஹாரத்தில் எப்படி இஸ்லாம் மக்களின் குடியிருப்பு என்பது எப்போதும் அந்த வழியில் பயணிக்கையில் எழும் கேள்வி. அம்மக்களிடையே எக்குழப்பமும் இல்லை. மசூதியும் உண்டு; மாரியம்மன் கோயிலும் உண்டு. எல்லோர்க்கும் பொதுவாக மாமிசக் கடைகளும் உள்ளன.

* காவிரியிலும், பவானியிலும், காளிங்கராயன் வாய்க்காலிலும் நிரம்பி நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. பேரேஜில் வடிகட்டப்படுவதால் காவிரி சுத்தமாக ஓடிக் கொண்டிருக்க, பவானி ஆகாயத் தாமரைகளின் ஆக்ரமிப்பில் திணறுகிறது.

*வியாழக்கிழமை கூடுதுறைக் கோயிலுக்குச் சென்றிருந்தோம். சங்கமப் பகுதியில் கூட்டம். செவ்வாய் தோஷப் பரிகாரங்கள் நிறைய நடந்து கொண்டிருந்தன. கம்பிகளால் பாதுகாப்பிற்கு விடப்பட்டிருந்த பகுதியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நீராடிக் கொண்டனர். ஆற்றில் நீர் நிரம்பி ஓடிக் கொண்டிருந்ததால், படிக்கட்டுகள் கொஞ்சம் மூழ்கி, பச்சையாகி இருந்தன. விடுமுறை என்பதால் சிறுவர்கள் கூட்டம் நிறைய இருந்தது. கன்னடம், இந்தி, தெலுங்குகளில் டூரிஸ்டுகள் வந்திறங்கி இருந்ததால் பல குரல்கள் கேட்டன.

பரிகாரப் பகுதியில் உன்னிப்பாகக் கேட்டதில், கங்கை, யமுனை, நர்மதை, கோதாவரி, தபதி பெயர்களெல்லாம் காவிரிக் கரையில் சொல்லப்படுகின்றன. மந்திரம் சொன்னவர்கள் அந்த நதிகளை எல்லாம் ஒருமுறையாவது பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே! இந்த நாடு மீண்டும் சமஸ்தானங்களாய்ப் பிரியாமல் ஒன்று படுத்தும் பல முக்கியமான பந்தங்களில் நமது பாரம்பரியம் ஒன்று என்பது மீண்டும் மீண்டும் உறுதியானது. திருவல்லம் பரிகாரத் தலத்திலும் இதே நதிகள் பெயர் சொல்லப்பட்டது நினைவுக்கு வந்தது.

வேதநாயகி அம்மன் கோயிலின் தூண்களில் சில உன்னத சிற்பங்கள் இருப்பதை, கால் நூற்றாண்டு வாழ்வில் இப்போது தான் காண்கிறேன். சில ::





















* மதியம் கொஞ்சம் வெயில் தணிந்த பின் படித்த பள்ளிக்கு ஒரு பயணம் சென்றோம். கிட்டத்தட்ட பனிரெண்டு ஆண்டுகள் கழித்து!

எத்தனை அனுபவங்கள்! எத்தனை நண்பர்கள்! எத்தனை கனவுகள்! எத்தனை கற்பனைகள்! எத்தனை எத்தனை நிகழ்வுகள்! மழை பெய்ததும் பதுங்கலில் இருந்து எட்டிப் பார்க்கும் வர்ணம் மாறும் பச்சோந்தியாய் மனக் கடலில் ஆயிரமாயிரம் உணர்ச்சிகள் அலையடித்தன. நிழல் மேடையில் உருவங்கள் நடமாடின. பிய்த்தெறிந்த காலத்தின் பெருங்கரத்தில் இருந்து விடுபட்டு வேக வேகமாய் வயது குறைந்து போனது.

சிறு வயதில் கண்ட அன்னைக்கும், இப்போது காணும் அன்னைக்கும் உருவ வித்தியாசங்கள் இருப்பினும் அவரது அன்பில் மாறுதல் இருப்பதுண்டோ?

புதுக் கட்டிடங்கள் எழும்பி இருந்தன. எல்லைகள் விஸ்தாரிக்கப்பட்டிருந்தன. சில வகுப்புகள் முகம் மாறி இருந்தன. சில கட்டிடங்கள் காணாமல் போயிருந்தன. கடவுளே!!!

ஈர மண் பறித்து விதைத்து வைத்து, கம்பி வேலிக்குள் காத்து வைத்திருந்த வேப்பஞ் செடிகள் மட்டுமே இன்று பிரம்மாண்டமாய் வளர்ந்து நம்மைச் சுகமாய்த் தாலாட்டுகையில், கண்களில் வந்ததோ இல்லையோ, நெஞ்சினில் கண்ணீர் கசிந்திறங்கியது.

த.ஆசிரியராகி விட்டிருந்த கணித ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மட்டும் அந்த விடுமுறை நாளிலும் வந்திருந்து பள்ளி குறித்த அவரது ஆசைகளைப் பகிர்ந்து கொண்டார்.











* பள்ளியில் இருந்து கிளம்பி அத்தாணி சென்று, அங்கிருந்து கோபி சென்று கிழக்காகத் திரும்பி ஈரோடு செல்லும் வழியில் வந்து கவுந்தப்பாடி வழியாக, காளிங்கராயன்பாளையத்தைக் கடந்து நகருக்குள் நுழைவதாகத் திட்டம்.

அருமையான வயல்கள். விதவிதமான பச்சை நிறங்கள். இளம் பச்சை, நிமிர்ந்த பச்சை, முதிர்ந்த பச்சை என! பின்புலமாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் லேயர் லேயராக ஒன்றுக்குள் ஒன்றாக விழுந்து படர்ந்திருந்தன. வாய்க்கால்களில் நீர் சுழித்துக் கொண்டு ஓடியது. மஞ்சள் வெயில் கதிர்கள் அடிவானெங்கும் சிவக்கப் படுத்தி இருந்தது.

மனம் முழுதும் ஒரு பாடல் தனக்குத் தானே ஒலிபரப்பி எதிரொலித்துக் கொண்டே வந்தது. வெகு காலங்களுக்கு முன்னால் இவ்வழியே ஒரு நாளின் மீ அதிகாலையில் சென்ற போது பதிந்த பாடல் அது!

'எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு!
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு!
என் கண்ணோடு!'

வளைந்து வளைந்து செல்லும் தார்ச் சாலைகள். அவ்வப்போது எதிர்ப்படும் கிராமங்கள். பழைய ரஜினி, விஜயகாந்த ரசிகர் மன்ற போர்டுகள்.

பாரியூர் தாண்டியவுடன் ரிஸர்வில் விழுந்த வண்டியை 60. கி.மீ. வேகத்துக்கு முறுக்கியதில், கோபியை நெருங்கும் போது ஒரு பங்க் வரை ஓட்டி வந்து விட்டோம்.







* வெள்ளிக் கிழமை காலையில் ஈரோடு சென்று திருச்செங்கோடு வழியாக ராசிபுரம், சேலம் செல்லும் பேருந்தில் ஏறி மல்லசமுத்திரம் செல்வதாக ப்ளான்.

பொன்னி நதி பிரிக்கின்ற கொங்கு மண்டலத்தின் இரு பெரும் பிரிவுகளின் நில, வாழ்வு முறை, வெயில் வேறுபாடுகள் தெள்ளெனத் தெரிகின்றன.

கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், சத்தி, கோபி, பவானி, ஈரோடு, கரூர் என்பன ஒரு குழு. காவேரி, பவானி, நொய்யல், சிறுவாணி, அமராவதி நதிகள் பாயும் வளப் பிரதேசம். மேற்கு மலைத் தொடர்கள் எல்லைகளாக இருப்பதால், காற்றில் குளிர் கரைந்திருக்கும். நெல், மஞ்சள், கரும்பு, பருத்தி, தென்னை வயற் பயிர்கள். மேட்டூர், பவானிசாகர் அணைக்கட்டுகள்.

சேலம், நாமக்கல், சங்ககிரி, ராசிபுரம், திருச்செங்கோடு, வீரபாண்டி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி வரை மற்றொரு குழு. அனலடிக்கும் வெயில். மேட்டூர் அணையில் இருந்து வரும் காவேரி நீர் மட்டுமே நீராதாரம். இன்றேல், நிலத்தடி நீர். விவசாயத்தை விடவும் விசைத்தறிகள், கைத்தறிகள் அதிகமான தொழில் வாய்ப்புகள். காற்றில் எப்போதும் ஒரு பஞ்சு வாசம். வறண்ட மொட்டை சிமெண்ட் மலைகள்.

பேச்சுத் தமிழிலும் எளிதாக வேறுபாடுகளைக் கண்டு கொள்ளலாம்.











* எங்கள் பகுதியில் காலை 9 முதல் 12 மணி வரை முதல் ஸ்லாட். அலுவலக நேரத்தில் அரை நாள் காலி! பின் மாலை 6 டு 7. கடைசி ஸ்லாட் நள்ளிரவு 1 முதல் 2 வரை!

இது தீபாவளிக் காலமாம்! பொட்டுத் துளி மழை வரவில்லை. பட்டாசு சத்தங்கள் கேட்கவில்லை. இதுவா மழைக்காலம்? தமிழகத்தில் வெயில்காலம், குளிர்காலம், மழைக்காலம், வசந்தகாலம் எல்லாம் மாறிப் போய் ஒரே கொளுத்தும் அனல் பொழுதுகள் மட்டுமே அவதரித்துள்ளன.

இருள் வந்து கவ்விய பின் பிறை நிலா நில்லாது உருண்டு ஓடிக் கொண்டிருந்தது. தொப்பியைப் போல் கருப்பு எங்கும் கவிழ்த்திருந்தது.



* தீராக் கொசு ரீங்காரத்திலும், நசநசக்கும் வேர்வையிலும், கரும்புகை கொப்புளிக்கும் சீமெண்ணெய் சீசா விளக்கின் நுனி நடனமிடும் நெருப்பின் ஒளியில், இரட்டை வரித் தாட்களில், அ, ஆ, இ, ஈ எழுதும் குட்டிச் சிறுமி, அந்த விளக்கைப் போல் எதிர்காலத்தின் மேல் ஒரு ஒளியைப் பாய்ச்சுகிறாள்.

Comments

அட ஈரோட்டுக்காரரா நீங்களூம்... நானும்தான். ஒரு சாதாரண விசிட்டை இவ்வளவு நல்லா எழுதியிருக்கீங்களே! எங்கே இருக்கு அந்த சக்தி மேல் நிலைப் பள்ளி?
Unknown said…
நம்ம ஊர கலக்கலா போட்டோ எடுத்து பதிவுகளையும் பட்டைய கெலப்பீருக்கீங்க ..... அழகு ...!! நானும் ஈரோடுதான்...!!
அன்பு திகழ்மிளிர்...

நன்றிகள்.

***

அன்பு சாணக்கியன்...

நன்றிகள். நான் ஈரோடு அல்ல. பவானி. தங்கள் பாராட்டுக்கு நன்றிகள். 'சக்தி மேல் நிலைப்பள்ளி' பவானியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஆப்பக்கூடல் என்ற ஊரில் சக்தி சுகர்ஸ் தொழிற்சாலையின் கட்டுப்பாடில் இயங்குகின்ற பள்ளி.

***

அன்பு லவ்டேல் மேடி...

நான் ஈரோடு அல்ல. பவான். தங்கள் பாராட்டுக்கு நன்றிகள்.

என் காலப்பயணி வலைப்பதிவில் இன்னும் நிறைய பதிவுகளைப் படிக்கலாம். உங்கள் இருவரையும் வரவேற்கிறேன்.
கோவையில் உள்ள பலருக்கும் பீளமேடு என்றாலே தனிபாசத்துடன் உருகுவார்கள்./

nice..
படங்கள் அருமை

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)