Skip to main content

3:சிறுதுளி பெருவெள்ளம்

பானீ,வெள்ளம்,ஜல்,நீரு,நீலு என்று வெவ்வேறு மொழிகளில் அழைக்கப்படும் நீரின்றி அமையாது உலகு.அது சரி வெறுங்கையில் முழம் போட முடியுமா? மழை இன்றி இவ்வுலகின் நீர் ஆதாரங்கள் தான் செழிக்குமா?

ஆறு,ஏரி,குளம்,கிணறு,ஓடை,அருவி என்று இந்த உலகிலுள்ள பல்வேறு நீர்வளங்களுக்கு மழையே ஆதாரம்மழை பெய்யாமல் பொய்க்கும்போது தான் அதனுடைய அருமையை உணர்வோம்.சிறுவாணி,புழல் ஏரிகளின் தற்போதைய நீர்வரத்து,அடிப்பம்பு,லாரித் தண்ணீர்,மழை நீர் சேகரிப்புத் திட்டம் என்று ஆயிரம் விஷயங்களைப் பேச,சிந்திக்கத் துவங்குவோம்..பணத்தைப் பல தலைமுறைகளுக்குச் சேமித்துவைக்கத் துடிக்கும் நாம்,நீர் போன்ற இயற்கை வளங்களைப் பொறுத்த மட்டிலும் அவற்றின் மதிப்புணரா தற்குறிகளாய் இருக்கிறோம்.இதே நிலைமை நீடித்து வந்தால் அடுத்த உலகயுத்தம் நீரின் முன்னிட்டே இருக்கும் என்று கூற முடியும்.யார் கண்டது,இந்தியாவே அது போன்றதொரு யுத்தம் துவங்குமிடமாய் இருக்கக் கூடும்.

ஐ.நா. சபையின் உலக நீர்ப்பயன்பாட்டு அறிக்கையின் படி தற்போது உலகிலுள்ள 6 பில்லியன் மக்கள்கூட்டம் ஏறத்தாழ பூமியிலிருக்கும் 54 % தூயநீரினைப் பயன்படுத்தி வருகிறது.2025 ஆம் ஆண்டில் இது 70% ஆக அதிகரிக்கக்கூடும்.தனிமனித நீர்ப்பயன்பாடு தற்போதைய விகிதத்தில் அதிகரித்து வருமாயின் இன்னும் 20 வருடங்களில் மனித சமுதாயம் உலகிலுள்ள 90% நீர்வளங்களைக் காலியாக்கிவிடும்.அடுத்து வரும் இருபதாண்டுகளில் பெருகிவரும் மக்கள்தொகையும் அதனையொட்டி அதிகரிக்கும் நுகர்வுத்தேவைகளும் மேற்கு ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளைத் தண்ணீர் பஞ்சத்திற்கு உள்ளாக்கி விடும்.மரம் வெட்டுவதால் மழை குறைகிறது.மழையில்லாமல் விவசாயம் பொய்த்துவிட்ட நிலையில் வயிற்றுப்பாட்டிற்கு வேலை தேடி நகருக்குப் புலம் பெயர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.திட்டமிடப்படாத,கட்டுப்படுத்தப்படாத நகர் புறப்பெருக்கம் அங்குள்ள இயற்கை வளங்களை அழித்து விட்டே நடக்கிறது.என இது ஒரு சுழற்சியான நிகழ்வு.

இந்த நகர்புறப்பெருக்க நிகழ்வுக்கு "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்றழைக்கப்படும் கோவை மட்டும் விதிவிலக்கா என்ன? சுவையான சிறுவாணி நீருக்குப் பெயர் போன கோவையில் மரம் வளர்ப்பு/பராமரிப்பில் உள்ள தொடர்ச்சியான புறக்கணிப்பு,நீர்வளங்களின் மீதான ஆக்கிரமிப்பு,மோசமான பராமரிப்பு காரணமாய் வெகுவிரைவில் ஒரு தண்ணீர்ப்பஞ்சம் திணிக்கப்பட உள்ளது.சிங்காநல்லூர் குளத்தேரியினைக் கடந்து செல்லும் போதெல்லாம் இந்தக் குளத்தின் இன்றைய மோசமான நிலமைக்கு நாமும் ஒரு காரணம் என்று ஆதங்கப்படுவதோடு இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற கவலையும் வெகுவாய் இருந்து வந்தது.சிறுதுளி திட்டத்தினைப் பற்றி அறியும் வரையில்.

சிறுதுளிகள் சேர்ந்து உருவாவதே பெருவெள்ளம்.அதுபோல கோவையின் எக்கோஸிஸ்டத்தினைப் புத்துயிரூட்டும் வண்ணம் திருமதி.வனிதா மோகன்(ப்ரிகால்) அவர்களின் சீரிய முயற்சியினால் உருவாக்கப்பட்டதே இந்த சிறுதுளி திட்டம்."தூய்மையான கோவை,பசுமையான கோவை" என்னும் கொள்கைகளுடன் உருவானதே இந்த சிறுதுளி திட்டம்.

இந்தத் திட்டமானது திரு.S.V.பாலசுப்ரமணியம்(CMD,பண்ணாரி அம்மன் சுகர்ஸ்)அவர்களைச் சேர்மனாகவும்,மருத்துவர் R.V.ரமணி(சங்கரா கண் மருத்துவமனை),ரவி சாம்,ஆரதி வரதராஜ்,கனக்லால் அபய்சந்த்,N.V.நாகசுப்ரமணியம் போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள சிறுதுளி ட்ரஸ்டியினால எடுத்து நடத்தப்படுகிறது.பெரிய அளவிலான மழை நீர் சேகரிப்பு,திட/திரவக் கழிவுகள் மேலாண்மை,ஆறு/குளம்/ஏரி போன்ற நீர் வள ஆதாரங்களின் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்,அவற்றினைத் தூர்வாரல்,கரைகளை செப்பனிடுதல்,பெரிய அளவிலான மரப்பெருக்கம் என்று தனது இலக்கினை அடைய வெவ்வேறு களங்களில் பயணிக்கிறது இந்த சிறுதுளி திட்டம்.

கிருஷ்ணாம்பதி,செல்வம்பதி,முத்தண்ணன்குளம்,செல்வமுத்தண்ணன் குளம்,பெரிய குளம்,சின்ன குளம்,வாலன் குளம்,சிங்காநல்லூர் குளத்தேரி போன்றவை கோவையிலுள்ள சில முக்கிய குளங்கள்.நகரின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள இந்தக் குளங்கள் நிலத்தடியே உள்ள கால்வாய்களால் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன.நாளடைவில் பல்வேறு காரணங்களால் இந்தக் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாய் மழைநீரானது குளங்களுக்கிடையே சீராகச் செல்ல இயலாமற்போனது.சில கால்வாய்களின் மேலே நிகழ்ந்த ஆக்கிரமிப்பு,கால்வாய் குளங்களை இணையும் இடத்தில் ஏற்பட்ட பிளாஸ்டிக் அடைப்புகள் போன்றவற்றின் காரணமாய் மழை நீர்வெள்ளமானது எதிர்த் திசையில் பெருகி ஓடி, பல இடங்களை வெள்ளக்காடாக்கிய நிகழ்வுகள் அனைவரும் அறிந்த ஒன்றே.

கோவை மக்களிடையே விழிப்புணர்வையும்,இந்தத் திட்டத்தினால் விளையும் நீண்டகால நன்மைகளையும்,முக்கியமாக நம்மால் முடியும் என்ற நம்பிக்கையினையும் புகுத்த கரும்பு வளர்ப்பு ஆராய்ச்சிக்கூடத்திற்கு அருகே உள்ள கிருஷ்ணாம்பதி குளத்தினைத் தூர் வாரும் பணி முதலில் மேற்கொள்ளப்பட்டது.108 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தில் ஏறத்தாழ 30% ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததது.தூர் வாருதல் முடிந்தபின்னர் மேலும் ஆக்கிரமிப்புகள் நேராவண்ணம் கரைகளை உயர்த்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.இந்தக் குளத்தினை நோக்கிச் செல்லும் கால்வாய்களும் தூர்வாரப்பட்டன.சிறுதுளியின் முதல் துளி இது தான்.பிறகு நடந்ததெல்லாம் வரலாறு தான்.

இந்தத் திட்டத்தின் மற்றுமொரு முக்கிய இலக்கான பெரும் மரப்பெருக்கத்தினை அடைவதன் முதல் படியாகச் சுமார் 1 இலட்சம் மரக்கன்றுகள் பெரியகுளம்,கிருஷ்ணம்பதி போன்ற குளங்களின் கரைகள்,ராம் நகர்,ஹோப் காலேஜ் போன்ற இடங்களில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.பசுமைப் பயணம் என்னும் இந்த நிகழ்வானது நமது குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் அவர்களால் 6,ஜூலை,2005-ல் துவங்கி வைக்கப்பட்டது. கோவையிலுள்ள பள்ளிச் சிறார்களிடையே மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தினை எடுத்துரைக்கும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் வருகிறது.தற்போது நொய்யல் ஆற்றினைச் சுத்திகரிப்பதில் பெரும் முனைப்புடன் இயங்கி வருகிறது சிறுதுளி திட்டம்.

இப்படியாகக் கோவையின் எதிர்காலமானது சத்தமின்றி மாற்றியமைக்கப் பட்டுவருகிறது.
இந்தத் திட்டம் பற்றி மேலதிக விவரங்களுக்கு http://www.siruthuli.org/

"தூய்மையான கோவை,பசுமையான கோவை"

Comments

Anonymous said…
Hats off for Siruthuli....

Kongu Vellalan

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)